தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம் (49). இவர் தேவதானப்பட்டி பேரூராட்சியில் தற்காலிக தூய்மைப் பணியாளராகக் கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் குள்ளப்புரம் பகுதியில் உள்ள தனது மகளின் வீட்டிற்கு இன்று இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது தேனியில் இருந்து ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு காய்கறி ஏற்றிச் சென்ற வாகனம் பரமசிவம் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் பரமசிவம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர், பரமசிவம் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த தேவதானப்பட்டி காவல் துறையினர், லாரி ஓட்டுநர் ஸ்டாலின் என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.