கோயம்புத்தூர்: முருக பக்தர்களை ஒடுக்க 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது அராஜகத்தின் உச்சம் எனவும், தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா? காட்டாட்சியா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கோவை தெற்கு தொகுதி பாஜக சட்ட மன்ற உறுப்பினரும், அகில இந்திய பாஜக மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
அதாவது, மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கையாக நேற்று (பிப்.3) காலை முதல் இன்று இரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், பொது அமைதியை பாதுகாக்கும் வகையில் போராட்டங்கள், கூட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியர் சங்கீதா தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழர்களின் உணர்வோடு, வாழ்வியலோடு இரண்டற கலந்து விட்ட முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் வீடு திருப்பரங்குன்றம். இங்கு ஒரு தர்கா இருப்பதை காரணம் காட்டி, திருப்பரங்குன்றம் மலை மீது இருக்கும் முருகன் கோயிலை சீர்குலைக்கவும், திருப்பரங்குன்றம் மலைக்கு சொந்தம் கொண்டாடி, ஆக்கிரமிக்கும் உள்நோக்கத்தில் சில சக்திகள் அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றன.
முருக பக்தர்களை ஒடுக்க 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது அராஜகத்தின் உச்சம். தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா, காட்டாட்சி என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. pic.twitter.com/XaWNh5sYWJ
— Vanathi Srinivasan (@VanathiBJP) February 3, 2025
திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர், தனது ஆதரவாளர்களுடன் சென்று, அறுபடை வீடான திருப்பரங்குன்றம் மலை மீது அத்துமீறலில் ஈடுபட்டார். இதை பாஜக உள்ளிட்ட கட்சிகளும், இந்து அமைப்புகளும் சுட்டிக்காட்டியும் திமுக அரசு மௌனமாக வேடிக்கை பார்த்து வருகிறது.
இதையும் படிங்க: திருச்செந்தூர் முருகன் கோயில் நாழிக்கிணறு புதுப்பிக்கும் பணி.. பக்தர்கள் நீராட மாற்று ஏற்பாடு!
முருகப்பெருமானின் அறுபடை வீடான திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்கவும், குழப்பத்தை விளைவித்து, அமைதியை கெடுக்க நினைக்கும் அடிப்படைவாதிகளுக்கு எதிராகவும் இந்து அமைப்புகள் போராட்டம் அறிவித்தன. ஆனால், அமைதியை கெடுக்க அராஜகத்தில் ஈடுபட்ட அடிப்படைவாதிகளை வேடிக்கை பார்த்த திமுக அரசு, முருகனின் அறுபடை வீட்டை காப்பாற்ற போராடும் இந்து அமைப்புகளின் போராட்டத்தை ஒடுக்க அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது.
ஏதோ அந்நிய நாட்டு சக்திகளை ஒடுக்குவது போல, மண்ணின் மைந்தர்களை ஒடுக்க, காவல்துறையை ஆயிரக்கணக்கில் ஏவி விட்டுள்ளது திமுக அரசு. அமைதி வழியில் போராடும் பலரை கைது செய்து வருகிறது. இது கடும் கண்டனத்திற்குரியது. திமுக அரசும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையும், தனது அராஜகத்தை கைவிட்டு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையின்படி, இந்து அமைப்புகள் அமைதி வழியில் போராட அனுமதிக்க வேண்டும். இல்லையெனில் முருகனும், முருக பக்தர்களும் திமுக அரசை தண்டிப்பார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.