சேலம்: சேலம் குகை நரிக்குறவர் காலனியைச் சேர்ந்தவர், சுரேஷ்பாபு. இவரது மகன் நந்தகுமார். 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 449 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். சேலம் மாவட்டத்தில் வசிக்கும் நரிக்குறவர் சமூக மாணவர்களில், இவரே அதிக மதிப்பெண்கள் பெற்று 12ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
இந்நிலையில் மாணவர் நந்தகுமார் இன்று (மே 12) தனது தாய் நதியா மற்றும் உறவினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்றார். பின்னர் தாம் உயர் கல்வி படிக்கும் வகையில், இந்து நரிக்குறவர் (எஸ்.டி) சாதிச்சான்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
இதுகுறித்து மாணவர் நந்தகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சேலம் கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்தேன். நடந்து முடிந்த பொதுத்தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு 449 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். கல்லூரியில் உயர்கல்வி படிப்பில் மாணவர் சேர்க்கை பெறுவதற்கு, இந்து நரிக்குறவர் (எஸ்.டி.) சாதிச் சான்று வேண்டும். அந்தச் சான்று கிடைத்தால், எனக்கான சலுகைகளைப் பெற முடியும்.
எனவே, எனது அவசியம் கருதி, எஸ்.டி. சாதிச் சான்றிதழ் வழங்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களது பஞ்சம் தாங்கி ஏரி பகுதியில் என்னைப் போல் உள்ள நூற்றுக்கணக்கான நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு எஸ்.டி. சான்றிதழ் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.