தமிழ்நாடு அளவில் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்து வைரஸ் தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் பாதுகாப்புப் பணியை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி சேலம் மாவட்டத்தில் கரோனா நோய்த் தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று (மே.13) வந்து மாவட்ட அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் கரோனா பாதிப்பு நிலவரம், அரசு, தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது, " கரோனா நோய்த் தொற்று இல்லாத மாவட்டமாக சேலம் மாவட்டத்தை உருவாக்க அனைவரும் இணைந்து பணியாற்றுவோம். எந்தெந்த மருத்துவமனைகளில் குறைகள் உள்ளதோ அவற்றை உள்ளபடி கண்டறிந்து தீர்க்க முதலமைச்சர் உத்தரவிட்டு இருக்கிறார்.
ஆக்ஸிஜன் பற்றாக்குறையைத் தீர்க்க நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும்.
செவிலியர், மருத்துவர்கள் பற்றாக்குறையைப் போக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். சேலம் அரசு மருத்துவமனையில் சிடி ஸ்கேன் வசதி தேவைக்கேற்ப அமைக்கப்படும். ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய சில இடங்களை ஆய்வு செய்கிறோம். தனியார் மருத்துவமனைகளில் அரசு செலவில் கரோனா சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்கள் ஊரடங்கை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். சேலம் மாவட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: எரிபொருள் நிரப்பும் நிலையங்கள், வரி வரும் வழிகள் அல்ல - கமல் ஆவேசம்!