சேலம் மேற்கு மாவட்ட பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 1,026 மக்கள் குறைதீர் மனுக்களை சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பார்த்திபன், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை நேரில் ஆய்வு செய்தபோது அங்கு எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல், நோயாளிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இது தொடர்பாக ஒரு தெளிவான ஆய்வறிக்கையை மாவட்ட ஆட்சியரிடமும், தலைமைச் செயலாளருக்கும், சுகாதாரத்துறை செயலாளருக்கும் அளிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும், நாள் ஒன்றுக்கு 8,000 பொதுமக்கள் வந்து செல்லும் தலைமை அரசு மருத்துவமனையில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருப்பது வேதனையளிக்கிறது. அங்கு போதுமான மருத்துவர்கள் இல்லாமல் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர் என்றும் அவர் கூறினார்.