சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரியான தீபக் (24) அப்பகுதியிலுள்ள உரக்கடை ஒன்றில் வேலை செய்துவருகிறார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த தனது அத்தை மகளான வேதவள்ளி என்பவரைக் காதலித்து, நான்கு மாதங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் வேதவள்ளி, தீபக்கை வேலைக்கு அனுப்பி வைத்துவிட்டு அருகிலுள்ள தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு சென்ற அவர், சிறிது நேரத்தில் அலறி சத்தம் போட்டுள்ளார்.
இதனைக்கேட்டு உள்ளே சென்ற அவரது பெற்றோர் பார்க்கையில் வேதவள்ளி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதன்பின் உடலில் தீக்காயங்களுடன் அவரை மீட்டு அருகேவுள்ள மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
அங்கு வேதவள்ளிக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மனைவி தீக்குளித்த செய்தியறிந்த தீபக் எலி மருந்து தின்ற நிலையில், மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.
இது குறித்து தகவலறிந்த மேட்டூர் காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் வேதவள்ளி, சிறுநீரகத்தில் படிந்துள்ள கற்களால் ஏற்பட்ட வலி தாங்காமல் தீக்குளித்து தற்கொலை முயற்சிசெய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
ஆனால் திருமணமான நான்கே மாதத்தில் காதல் தம்பதி தற்கொலைக்கு முயன்றதற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து கொளத்தூர் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: இளம்பெண்ணை சீண்டிய இளைஞர் போக்சோவில் கைது!