சேலம்: தமிழ்நாட்டில் தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில், திமுகவின் தேர்தல் பரப்புரை பாடலான "ஸ்டாலின் தான் வாராரு விடியல் தரப் போறாரு" என்ற பாடலை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்காக மாவட்ட வாரியாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், சேலம் மக்களிடையே திமுக பரப்புரை பாடலை சேலம் மாவட்ட மக்களிடையே கொண்டு செல்லும் பொருட்டு சேலம் மத்திய மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப் பேரவை தொகுதிகளிலும் மிதிவண்டி பரப்புரை பேரணிப் பயணம் நடைபெற்றது.
சேலம் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள செவ்வாய்பேட்டை, சீனிவாசா பார்க் பகுதியில் இருந்து மத்திய மாவட்ட செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான ராஜேந்திரன், சைக்கிள் ஓட்டியபடி பேரணியைத் தொடங்கி வைத்தார்.
பின்னர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் மிதிவண்டி ஓட்டிக் கொண்டு முன் செல்ல, திமுகவினர் 100க்கும் மேற்பட்டோர் மிதிவண்டிகளில் திமுக கொடியை கட்டிக்கொண்டு , சாலையில் பரப்புரை பேரணி பயணம் மேற்கொண்டனர்.
சேலம், செவ்வாய்பேட்டையில் தொடங்கிய பரப்புரை பேரணி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சின்னக்கடைவீதி, முதல் அக்ரஹாரம், பட்டைக் கோயில், அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி வழியாக சென்று கன்னங்குறிச்சியில் முடிவுற்றது. இதில் ஏராளமான திமுகவினர் கலந்துகொண்டனர்.