கர்நாடகா மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அங்குள்ள முக்கிய அணைகளான கபினி, கேஆர்எஸ் உள்ளிட்ட அணைகள் நிரம்பியது. இதனால் கர்நாடகாவில் இருந்து காவிரியில் வினாடிக்கு 2.39 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டது. இதை தொடர்ந்து மேட்டூர் அணை 100 ஆடியை எட்டியதால் கடந்த 13ஆம் தேதி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.
காவிரி ஆற்றில் அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் யாரும் உரிய பாதுகாப்பின்றி காவிரி ஆற்றுப்படுகை, கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளில் குளிக்கவோ, நீச்சல் அடித்தல் மற்றும் மீன்பிடித்தல் போன்ற செயல்களில் ஈடுபடவேண்டாம் எனவும், குழந்தைகள் காவிரி ஆற்றுப்படுகை, கால்வாய்கள், நீர்நிலைகளில், இறங்கிடாத வகையில் பொதுமக்கள், பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் அவர் தொடர்ந்து கூறுகையில், நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறித்து பொதுமக்களுக்கு அவ்வப்போது தகவல் தெரிவிக்கப்படும். மேலும், காவிரி கரையோர கிராமங்களில் வெள்ள நீரால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவை எனக் கண்டறியப்பட்ட இடங்களில் மாவட்ட அளவில் நியமனம் செய்யப்பட்டுள்ள பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எனவே, ஆற்றின் கரையோர கிராமங்களின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் பாதுகாப்பான இடங்களுக்கும், மாவட்ட நிர்வாகத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ள நிவாரண முகாம்களுக்கு செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மாவட்ட அவசர கால நடவடிக்கை மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் - 0427-1077. காவல்துறை கட்டுப்பாட்டு எண்-100. தீயணைப்புத் துறை கட்டுப்பாட்டு - 101. மருத்துவ உதவி - 104. அவசர கால ஆம்புலன்ஸ்- 108. மேட்டூர் வருவாய் கோட்டாட்சியர், மேட்டூர் 94450 – 00435, வட்டாட்சியர், மேட்டூர் -94450 - 00552. வருவாய் கோட்டாட்சியர், சங்ககிரி - 94450 – 00436. வட்டாட்சியர், எடப்பாடி- 94450 - 00556. வட்டாட்சியர், சங்ககிரி-94450 - 00554 என்ற எண்களில் அவசர கால உதவிக்கு தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.