சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டாரப் பகுதிகளை மாவட்ட சுகாதாரத் துறை சார்பில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு டெங்கு, வைரஸ் காய்ச்சல் பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் தீவிர டெங்கு ஒழிப்பு சிறப்பு முகாம் நடைபெற்றுவருகிறது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ராமன் கலந்து கொண்டு கொசு மருந்து தெளிக்கும் வாகனத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தார். பின்பு ஒருங்கிணைந்த சுகாதார பணியாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கிய அவர், தெருக்களில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றியும், அரசு அலுவலகங்கள், மருத்துவமனை ஆகிய பகுதிகளுக்கு சென்று தூய்மை பணிகளை ஆய்வுகள் செய்தார்.
பின்னர் பொதுமக்களிடம் பேசிய ஆட்சியர் ராமன், நமது பகுதியை காய்ச்சல், நோய் தாக்கம் இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும். இந்த பணிகளில் ஏதாவது இடையூறுகள் இருந்தால் அவற்றை அலுவலர்களிடம் கூறி சரி செய்து கொள்ள வேண்டும் என்றார். மேலும் வீட்டருகில் உள்ள இடங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
குப்பைகளை சாக்கடையில் கொட்டாமல், மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரித்து தனித்தனியாக பேரூராட்சி பணியாளர்களிடம் வழங்க வேண்டும். காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை அணுகி டெங்கு காய்ச்சலா, சாதாரண காய்ச்சலா என்பதை அறிந்து மருத்துவமனையிலேயே சரி செய்துகொள்ள வேண்டும். குடிநீரை நன்கு காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும். வீடுதேடி மருந்து தெளிக்க வரும் சுகாதார பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர்.
இந்த ஒருங்கிணைந்த சுகாதார பணியில் சுகாதாரத் துறை அலுவலர்கள், பேரூராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: குப்பைகளை சாலையில் கொட்டுவதை தடுக்க நூதன விழிப்புணர்வு