சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் புற்றுநோய் அறுவை சிகிச்சைப் பிரிவு தொடக்க விழா இன்று நடைபெற்றது. அறுவை சிகிச்சை பிரிவினை சேலம் அரசு மருத்துவமனை டீன் பாலாஜி நாதன் தொடங்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”சேலம் அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவில் மாதமொன்றுக்கு 1800 பேர் வரை புறநோயாளிகளாக வந்து சிகிச்சைப் பெறுகின்றனர். மாதந்தோறும் 100 பேர் வரை ஹீமோதெரபி சிகிச்சை பெற்றுவருகிறார்கள். புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கும் வகையில் அறுவை சிகிச்சைப் பிரிவு புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.
சேலம் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவினை நவீனப்படுத்தும் வகையில் துல்லியமான சிகிச்சை மேற்கொள்ளும் 24 கோடி ரூபாய் மதிப்பிலான லீனியர் கருவி 24 விரைவில் வாங்கப்பட உள்ளது. தற்போது புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
சேலம் அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் தற்போது அறுவை சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டதன் மூலம் ஹீமோதெரபி, ரேடியோ தெரபி, பொது அறுவை சிகிச்சை, மகப்பேறு பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கி புற்றுநோய்க்காக ஒருங்கிணைந்த சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.