சேலம்: தமிழகம் முழுவதும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. காய்கறிகள், தக்காளி, இஞ்சி, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை கடந்த சில மாதங்களாக உயர்ந்து கொண்டே செல்கிறது.
இதனால் இல்லத்தரசிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழை எளிய குடும்பத்தினர் இந்த விலைவாசி உயர்வால் மிகப்பெரிய அளவிற்கு பாதிப்படைந்து உள்ளனர். இந்த நிலையில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி, அதிமுக சார்பில் இன்று (ஜூலை 20) தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அந்த வகையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட அதிமுக சார்பில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், "தமிழகத்தில் தக்காளி, சின்ன வெங்காயம் மற்றும் பிற காய்கறிகளின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனைப் பற்றி ஆட்சியில் இருக்கக்கூடிய திமுக அமைச்சர்கள் யாருக்கும் கவலை இல்லை. மேலான்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திடம் பத்திரிகையாளர்கள் உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வு குறித்து கேட்டதற்கு பக்கத்து மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கச்சொன்னார். தக்காளி விலை உயர்வுக்கு பக்கத்து மாநிலங்களை பார்ப்பதற்கு நாங்கள் உங்களை ஏன் அமைச்சராக்க வேண்டும்?" என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், "அண்ணா எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்த போது தமிழகத்தின் விலைவாசியைக் கண்டித்து, 'கும்பி எரியுது, குடல் கருகுது' என்று வசனம் பேசிக்கொண்டு கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர். ஆனால், இன்று உயர்ந்துள்ள விலைவாசியைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் எங்காவது போராட்டம் நடத்தியுள்ளனரா?
செந்தில் பாலாஜிக்கு சிறையில் சப்பாத்தி, கோழிக்கறி, உப்மா, சாம்பார் சாதம் மற்றும் இரவு பழம் என அனைத்து உணவும் கொடுத்துள்ளனர். உங்களிடம் அதிகாரம் உள்ளதால் பாதுகாப்பிற்கு தனியாக ஆள் போட்டு A கிளாஸ் சிறையில் வைத்துள்ளீர்கள். ஆனால், உங்களுக்கு தமிழ்நாட்டில் அல்ல டில்லியில் தான். அங்கு ஒன்றும் நடக்காது.
எடப்பாடி பழனிசாமி நினைத்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என சவால்விட்டுள்ளனர். ஆனால், எடப்பாடி பழனிசாமி நினைக்க வேண்டாம், பழனிக்கு சென்று பழனி முருகனை தரிசனம் செய்துவிட்டு வந்தால் போதும் எல்லாம் நடக்கும். திருச்செந்தூர் சென்று வந்தார்; செந்தில் பாலாஜி சிறைக்கு போயிட்டார். அதேபோல பழனிக்கு சென்று வந்தால் அவ்வளவுதான் திமுக கதை முடிந்தது" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, தமிழக அரசுக்கு எதிராகவும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம், சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் மற்றும் முன்னாள் எம்பி பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், சேலம் மாவட்டத்தில் இருந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, விலைவாசி உயர்வை உணர்த்தும் வகையில் தக்காளி, துவரம் பருப்பு, சீரகம், மிளகு மற்றும் காய்கறிகள் உள்ளிட்டவற்றை சீர்வரிசை போல் தலையில் ஏந்தி நூதன முறையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஸ்டாலினை மீண்டும் முதல்வராக்குவோம்; திண்டுக்கல் சீனிவாசன் உளறல் - அதிமுகவினர் கதறல்