சேலம்: தமிழ்நாட்டின் மின்சாரத் துறை முன்னாள் அமைச்சர் தங்கமணி, அவரது உறவினர்கள் வீடுகளில் இன்று (டிசம்பர் 15) காலை முதல் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் திடீர் சோதனை நடத்திவருகின்றனர்.
அதிமுக பிரமுகர்கள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல், கரூர் உள்ளிட்ட பகுதிகளிலும் சோதனை நடைபெற்றுவருகிறது. சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் தங்கமணியின் மகன் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் தீவிர சோதனை நடத்திவருகின்றனர்.
இந்த நிலையில் நெடுஞ்சாலை நகரில் சோதனை நடைபெறும் வீட்டின் முன்பு அதிமுக சேலம் தெற்கு எம்எல்ஏ பாலசுப்பிரமணியன் தலைமையில் முன்னாள் எம்எல்ஏக்கள், அதிமுகவினர் 100-க்கும் மேற்பட்டோர் திடீரென திரண்டு லஞ்ச ஒழிப்புத் துறை நடத்தும் சோதனைக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
காழ்ப்புணர்ச்சி செயல்
ஆர்ப்பாட்டத்திற்குப் பின்பு தெற்குத் தொகுதி அதிமுக எம்எல்ஏ பாலசுப்பிரமணியன் செய்தியாளரிடம் கூறும்போது, ”வேண்டுமென்றே அதிமுக கட்சியைச் சீர்குலைப்பதற்கு திமுக அரசு இந்த லஞ்ச ஒழிப்புச் சோதனைகளைத் தொடர்ந்து நடத்திவருகிறது.
தற்பொழுது அதிமுகவில் உள்கட்சித் தேர்தல் நடைபெற்றுவருகிறது. இந்த உள்கட்சித் தேர்தலைச் சீர்குலைக்கும் வகையிலும் திமுக தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் மனத்தில் மறக்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்த லஞ்ச ஒழிப்புச் சோதனையைத் திமுக அரசு அரங்கேற்றிவருகிறது" என்று தெரிவித்தார்.
அதிமுகவினரின் போராட்டத்தை அடுத்து நெடுஞ்சாலை நகரில் பாதுகாப்புக்காக காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:வேடசந்தூர் அருகே சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து; சிசிடிவி வைரல்!