தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடும்பன், காலாடி உள்ளிட்ட 7 உட்பிரிவுகளை சேர்ந்தவர்களை தேவந்திரகுல வேளாளர்கள் என அறிவிக்க மத்திய அரசுக்கு அண்மையில் பரிந்துரை செய்திருந்தார்.
இந்நிலையில், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வேளாளர் என்ற பெயரை வெள்ளாளர் சமுதாயத்தினர் பயன்படுத்தி வருவதால் இப்பெயரை மாற்று சமுதாயத்திற்கு விட்டுக்கொடுப்பது வேதனையாக உள்ளதாக வெள்ளாளர் சமுதாயத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், வேளாளர் பெயர் பறிபோக காரணமாகவுள்ள மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு வெள்ளாளர் சமுதாயத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து வெள்ளாளர் மகாசபை தலைவர் குரு. சுப்பிரமணியன் தலைமையில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய, மாநில அரசுகளை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
மேலும், தங்களது கோரிக்கை நிறைவேறாவிட்டால் எதிர்வரும் தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களிக்க மாட்டோம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: வேளாண் சட்டங்களுக்கு எதிராக விசிக ஆர்ப்பாட்டம்!