ராமநாதபுரம் அருகே உள்ள லாந்தை கருங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி வள்ளிமயில். இவரின் நிலத்தில் அதே பகுதியைச் சேர்ந்த காமராஜ் மகன் குருமூர்த்தி என்பவர் கேஸ் குடோன் வைத்து தொழில் செய்துவந்தார். இதற்கான பங்குத்தொகையை முறையாகக் கொடுக்காததால் வள்ளிமயில் இடத்தைக் காலிசெய்யும்படி கூறியுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த குரூமூர்த்தி, அவரது குடும்பத்தினர் வீடு புகுந்து வள்ளிமயிலை தாக்கினர். இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து தகவலறிந்த வள்ளிமயிலின் சகோதர்கள், மகன் ஆகியோர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அப்போது குருமூர்த்தியின் தரப்பினர் அங்கு வருவதாக வள்ளிமயிலின் சகோதருக்கும் மகனுக்கும் தகவல் கிடைத்தது.
உடனே அவர்கள் குருமூர்த்தியிடம் வள்ளிமயிலைத் தாக்கியது குறித்து கேட்டனர். இதனால் அங்கு இரு தரப்பினரிடமும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதன்பின் ஆத்திரம் தீராத குருமூர்த்தியின் தரப்பினர் மறைத்துவைத்த கத்தியால் வள்ளிமயிலின் சகோதரர், மகனை குத்தினர். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
குருமூர்த்தி தரப்பினரும் வள்ளிமயில் தரப்பினர் வழிமறித்து தாக்கியதாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து தகவலறிந்த ராமநாதபுரம் நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்த வழக்குத் தொடர்பாக தியாகராஜன் என்பவரைக் காவல் துறையினர் கைதுசெய்தனர். மேலும் 19 பேரைத் தேடிவருகின்றனர்.