ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மின்சார வாரியத்தில் பணியாற்றி வந்த முருகேசன் என்பவர், கடந்த 10 நாள்களுக்கு முன் பணி நிறைவு பெற்றார். இதனையடுத்து அவருக்குக் கிடைத்த ஓய்வு பணத்தில், சுமார் ஆறு லட்சம் ரூபாய் மதிப்பில் கரோனாவால் வாழ்வாதாரம் இழந்த சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சமூக இடைவெளியுடன் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்களை வழங்கினார்.
ராமேஸ்வரம் தீவில் பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்களும், தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் பல்வேறு அடிப்படைத் தேவையான பொருள்களை வழங்கி வரும் நிலையில், மின்சார வாரியத்தில் பணியாற்றியவர், தனக்குக் கிடைத்த ஓய்வுப் பணத்தில் உணவுப் பொருட்கள் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து முருகேசன் கூறுகையில், 'கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அரசு அறிவித்த ஊரடங்கினால் பலர் வேலை இழந்து மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். அவர்களுக்கு என்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என எண்ணி, எனது ஓய்வு பணத்தில் ஒரு தொகையை எடுத்து, பாதிக்கப்பட்ட 400 குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்கினேன்' என்றார்.
இதையும் படிங்க... ஸ்டாலினுடன் வீடியோ கால்... 400 பேருக்கு உணவு... கரோனா காலத்திலும் அசத்தும் இட்லி பாட்டி!