தமிழ்நாடு அமைச்சரவையிலிருந்து மணிகண்டனை விடுவித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று மாலை உத்தரவிட்டார். மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பரிந்துரையின் பேரிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் வருவாய்த் துறை அமைச்சராக உள்ள ஆர்.பி. உதயகுமார் கூடுதலாக, தகவல் தொழில்நுட்பத் துறையைக் கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற பின் முதன்முறையாக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான காரணமாக ஒரு தகவல் தற்போது கூறப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கைத்தறி துறை மற்றும் துணிநூல் துறை சார்பில் ஐந்தாவது தேசிய கைத்தறி தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. அதில் கலந்துகொண்டபின் பேட்டியளித்த மணிகண்டன்,
அரசு கேபிள் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதால் அரசுக்கு மாதந்தோறும் சுமார் 27 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. தற்போது தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகத் தலைவராக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் அரசு செட்-டாப் பாக்ஸ்களை கொடுக்காமல் தனியார் நிறுவன செட்-டாப் பாக்ஸ்களை வாடிக்கையாளர்களுக்கு கேபிள் ஆபரேட்டர்கள் வழங்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால் அவரே அக்சயா என்ற தனியார் கேபிள் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்நிறுவனத்தில் உள்ள இரண்டு லட்சம் வாடிக்கையாளர்களை அரசு கேபிளுக்கு மாற்றினாலே அரசுக்கு நல்ல வருவாய் கிடைக்கும். அரசு கேபிள் கட்டணம் குறைப்பது தொடர்பாக முதலமைச்சர் என்னிடம் கலந்து ஆலோசிக்கவில்லை என தெரிவித்தார்.
இதை தொடர்ந்து அவர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர், கால்நடைதுறை அமைச்சர் ஆகியோர் மீது மணிகண்டன் குற்றம்சாட்டியதே அமைச்சரவையில் இருந்து அவரை நீக்கியதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்த வீடியோவை பார்க்க... என்னிடம் எதுவும் ஆலோசிக்கவில்லை..! புகைச்சலை வெளிகாட்டிய அமைச்சர்..!