ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த சனிக்கிழமை (ஜுன் 27) 700க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மீன்பிடி அனுமதிச் சீட்டு பெற்று கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றன.
மறுநாள் காலை கடலுக்குச் சென்ற படகுகள் அனைத்தும் கரை திரும்பிய நிலையில், கிருஷ்ணவேணி என்பவரின் விசைப்படகு மட்டும் கரைக்குத் திரும்பவில்லை. அந்தப் படகில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த செல்வகுமார், சீனி, அண்ணாதுரை, பஷீர் ஆகிய நான்கு மீனவர்கள் சென்றிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து படகின் உரிமையாளர் மீன்வளத்துறையிடம் புகார் அளித்ததை அடுத்து, மீனவர்கள் நான்கு பேர் பாதுகாப்பு உபகரணங்களுடன் அவர்களைத் தேடிச் சென்றனர்.
ஆனால் காணாமல் போன மீனவர்கள் கிடைக்கவில்லை. பழுதான அவர்களது படகு இலங்கை கடற்பகுதிக்குள் சென்றுள்ளது. இந்நிலையில், காணாமல் போன படகையும் மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் மீட்டு, எல்லையில் இருந்த இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைத்தனர்.
அதனைத் தொடர்ந்து, கடலோர பாதுகாப்புப் படையினர் காணாமல் போன மீனவர்களைத் தேடி வந்த பிற மீனவர்களுடன் நால்வரையும் அனுப்பி வைத்தனர். பழுதான படகையும், நான்கு மீனவர்களையும் பாதுகாப்பாக ராமேஸ்வரத்திற்கு அவர்கள் அழைத்து வந்தனர். இந்நிலையில், கரோனா பாதிப்பால் இலங்கை கடற்படை அவர்களைக் கைது செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க... 'உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும்'