இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், தேசிய பல்லுயிர்ப்பரவல் ஆணையம், ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் ஒன்றிணைந்து 2012ஆம் ஆண்டு முதல் பல்லுயிர் பரவல் பாதுகாப்பில் சிறப்பாக பணிபுரியும் தனிநபர்கள், நிறுவனங்கள், பல்லுயிர் மேலாண்மைக் குழுக்கள் ஆகியோருக்கு (INDIA BIODIVERSITY AWARD) இந்தியா பல்லுயிர்ப் பரவல் விருதினை வழங்கி வருகின்றது. இந்தியா முழுவதுமாக 5 பிரிவுகளின் கீழ் 7 விருதுகள் வழங்கப்படுகின்றன.
இதில், ராமநாதபுரத்தில் பாக் ஜலசந்திப் பகுதியில் அமைந்துள்ள சதுப்புநிலக் காடுகளையொட்டி 2017ஆம் ஆண்டு வனத்துறையால் செயல்படுத்தப்பட்ட 'காரங்காடு சூழல் சுற்றுலா' மையத்தில் கடந்த 3 வருடங்களாக காரங்காடு சூழல் மேம்பாட்டுக் குழுவின் வளர்ச்சிக்கு சிறப்பாக களப்பணியாற்றியமைக்காகவும், சதுப்பு நிலக் காடுகளின் வளங்களை நிலையாகப் பயன்படுத்தி கடலோர மக்களின் வாழ்வாதாரத்தை உயர்தியதற்காகவும் 'உயிரியல் வளங்களை நிலையாகப் பயன்படுத்துதல்' என்றப் பிரிவின் கீழ் ராமநாதபுரம் வனச்சரக அலுவலர் சதீஷ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச உயிர்ப்பரவல் நாளான இன்று (மே 22) மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேக்கர் இந்த விருதை அறிவித்துள்ளார். கரோனா தொற்று பரவல் காரணமாக இந்த விருது வழங்கும் விழா இணையதளம் வாயிலாக நடைப்பெற்றது. சதுப்புநிலக்காடுகளின் முக்கியத்துவததை மக்கள் உணர்ந்து கொள்ள வனத்துறையால் ஏற்படுத்தப்பட்ட இந்த சூழல் சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த விருதானது தமிழ்நாடு வனத்துறைக்கும் ராமநாதபுரம் மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: வங்கக்கடலில் 60 கி.மீ வேகத்தில் காற்று வீசும்: மீனவர்களுக்கு எச்சரிக்கை!