கரோனா வைரஸ் காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. போக்குவரத்து சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதால், வெளிமாவட்டத்தில் உள்ள மக்கள் தங்களது சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.
இந்நிலையில் ஊரடங்கிற்கு முன்பு, இராமேஸ்வரத்திற்கு வந்த வடமாநிலங்களைச் சேர்ந்த சுமார் 182 பக்தர்கள், அதேபகுதியில் உள்ள விடுதிகளில் தங்க வைக்கப்பட்டு, தேவையான மருத்துவ வசதி, அடிப்படை வசதிகள் கொடுக்கப்பட்டதாக மாவட்ட நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதுதவிர ராமநாதபுரத்தில் 3 ஆயிரத்து 156 வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தங்கியுள்ளனர்.
இதுகுறித்து இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, 'வடமாநில பக்தர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில், வழங்கப்பட்டு வருகிறது. இம்மாவட்டத்தில் உள்ள 3074 வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு அடிப்படை தேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள 2029 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதில் 18 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதில் 1734 பேருக்கு தொற்று இல்லை என்றும்; மீதம் உள்ளவர்களுக்கு முடிவுகள் வரவுள்ளன. மேலும் 10 பேர் பூரண குணமடைந்து, வீடு திரும்பியுள்ளனர்’ எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தினமும் 300 நபர்களுக்கு இலவச தேநீர் வழங்கும் பிராமணர் சங்கம்