ராமநாதபுரம்: பாம்பன் அருகே உள்ள செக்கடி பகுதியைச் சேர்ந்தவர் அருளானந்தம். இவர் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மீனவர்களின் நலனைப் பாதுகாப்பதற்காகப் போராடிவருகிறார். இவர் இலங்கை-இந்திய மீனவர் நல பிரதிநிதியாகச் செயல்பட்டு இலங்கை இந்தியாவுடனான பேச்சுவார்த்தையின்போது அங்கு சிக்கியியிருந்த மீனவர்கள் தரப்பு நியாயங்களைப் பேசி அவர்களை மீட்பதற்கான செயல்பாடுகளைத் தொடர்ந்து செய்துவந்துள்ளார்.
ஏழை மீனவர்கள் வாழ்வாதாரம், உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள மீனவர்களைக் காப்பாற்றுவதை நோக்கமாகக் கொண்டு தொடர்ந்து செயல்பட்டுவந்தார். இவர் கவிதை எழுதும் பழக்கம் உள்ளதால் 'திவுக்கவி' என்றும் மீனவர்கள் மத்தியில் அன்புடன் அழைக்கப்பட்டவர்.
இவர் நேற்று உடல் நலக்குறைவு காரணமாக தனது 75ஆவது வயதில் காலமானார். அவரது மறைவிற்குப் பல்வேறு மீனவ சங்கப் பிரதிநிதிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களுடைய இரங்கலைத் தெரிவித்துவருகின்றனர்.
![மீனவர்கள் நல ஆர்வலர் அருளானந்தம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tnrmd-01-fishermen-welfare-activist-arulanatham-passed-away-pic-script-tn10040_11102021081334_1110f_1633920214_353.jpg)
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “தேசிய பாரம்பரிய மீனவர் பிரதிநிதி தீவுக்கவி அருளானந்தத்தின் மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை-இந்திய மீனவர்கள் வாழ்வுரிமைப் பிரச்சினையில் போராளியாகக் களத்தில் நின்று போராடியவர், கவிஞர் அருளானந்தம். மீனவர்களை மீளா துயரத்தில் விட்டுச் சென்றுள்ளார் அருளானந்தம் “ எனக் குறிப்பிட்டுள்ளார்.