ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் அனல்மின் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக அப்பகுதியில் உள்ள தனியார் நிலங்களை அரசு கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அவ்வப்போது போராட்டம் நடத்திவந்தனர். இது தவிர புறம்போக்கு நிலங்கள், தனியார் பட்டா விளைநிலங்களையும் கையகப்படுத்துவதற்காக நில அளவீடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், விளை நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் நிலம் கையகப்படுத்தும் பணி மீண்டும் துவங்கியுள்ளது.
வழக்கு நிலுவையில் உள்ளதால் உப்பூர் அனல்மின் உற்பத்தி திட்டத்திற்காக ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள விளைநிலங்களை கையகப்படுத்தும் முடிவை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும் என்று நாகனேந்தல், வளமாவூர் அனைத்து விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவிடம் முறையிட்டனர். நீதிமன்ற நடவடிக்கைக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்தால் விவசாயிகளின் போராட்டம் தீவிரமாகும் என்றனர். இதையடுத்து விவசாயிகளின் கோரிக்கையை மாவட்ட ஆட்சியர் ஏற்றுக்கொண்டார்.