மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை சார்பாக, தனுஷ்கோடி பழைய தேவாலயம் எதிரில் அமையவுள்ள புதிய கலங்கரை விளக்கத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் மன்சுக் எல் மாண்டவியா, புதிய கலங்கரை விளக்கம் அமைக்கும் பணியைத் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, 'தனுஷ்கோடியில் 7.1 கோடி ரூபாய் செலவில், 50 மீட்டர் உயரத்தில் மின் தூக்கி வசதியுடன் புதிய கலங்கரை விளக்கம் அமைக்கப்படுகிறது. இவற்றின் மேல் நின்று ராமேஸ்வரத்தின் ஓட்டு மொத்த அழகையும் சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசிக்க முடியும்.
இங்கு குழந்தைகளுக்கென பூங்காவும் அமையவுள்ளது. புதிய கலங்கரை விளக்கத்தின் ஒளி, 18 நாட்டிகல் தூரம் வரை பாயும் திறன் கொண்டது. ராமநாதபுரம் மாவட்டம், மத்திய அரசின் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய மாவட்டங்களின் பட்டியலில் உள்ளதால், இம்மாவட்டத்தை மேம்படுத்த பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மீனவர்களுக்கு, ஆழ்கடல் மீன்பிடிப்பு படகுகள் மானிய விலையில் அளிக்கப்பட்டு வருகிறது. சாகர் மாலா திட்டம் மூலம் சரக்கு கப்பல்கள் எளிதில் வந்து செல்ல முடியும். இதன் மூலம் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்" என்றார்.
இவ்விழாவின் போது, ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நாவஸ்கனி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ், ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எம். மணிகண்டன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: 'பின்னலாடை துறையினருக்கு நிதி அளிக்க விரைவில் அரசாணை' - கைத்தறி, ஜவுளித்துறை இயக்குநர்