ராமநாதபுரம் அருகே உள்ள சூரங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் விக்னேஷ்குரு-அனிதா தம்பதி. இவர்களுக்கு தியா சுஷ்மிதா என்ற மகளும் அம்சா என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில் விக்னேஷ் குரு தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அனிதா தனது குழந்தையை தொட்டிலில் போட்டுவிட்டு சேலையின் இருபுறத்தில் ஒருபுறத்தை அருகில் உள்ள பீரோவின் கைப்பிடியிலும் மற்றொரு புறத்தினை ஜன்னல் கம்பியிலும் கட்டிவிட்டு லேசாக ஆட்டி குழந்தையைத் தூங்க வைத்துவிட்டு வீட்டில் வேலை செய்துகொண்டிருந்தார். மூத்த மகள் விளையாடிக் கொண்டிருந்தார்.
தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை திடீரென்று கண்விழித்து துள்ளியது. இதில் பீரோவில் இணைக்கப்பட்டிருந்த சேலை துணியின் முனை இழுத்ததில் எதிர்பாராதவிதமாக பீரோ கவிழ்ந்து தொட்டிலின் மீது விழுந்துள்ளது.
இதில் தலையில் படுகாயமடைந்த குழந்தையின் பயங்கர அழுகை சத்தத்தையும் பீரோ விழுந்த சத்தத்தையும் கேட்டு அலறி அடித்துக்கொண்டு ஓடிவந்து பார்த்த தாய் உடனடியாக குழந்தையைத் தூக்கிக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றபோது குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் பஜார் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.