ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டிணம் அருகே உள்ள தனியார் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் என்ஐஏ வழக்கில் தொடர்புடைய நான்கு பேர் குழுவாகப் பேசிக் கொண்டு இருப்பதாக காவல்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து அந்த இடத்திற்கு சென்ற காவல் துறையினரை பார்த்தவுடன் அவர்கள் தப்பிச் செல்ல முயன்றனர். இதில் புறாக்கனி என்ற பிச்சைக்கனி, அமீர், முகமது அலி ஆதிய மூன்று பேர் பிடிபட்டனர். இவர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தியதில் தப்பிச் சென்ற மற்றொரு நபர் சேக் அப்துல்லா எனவும் தெரியவந்தது.
இவர்கள் சமீபத்தில கன்னியாகுமரி மாவட்டம் கலியக்காவிளையில் எஸ்.ஐ. வில்சனை சுட்டுக்கொலை செய்த குற்றவாளி அப்துல் அமீமிற்கு பண பரிவர்த்தனை செய்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் இங்குள்ள இஸ்லாமிய இளைஞர்களை உறுப்பினராக இணைத்து மூளை சலவை செய்து, பயிற்சி கொடுத்து ஜனநாயகத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட திட்டம் வைத்திருந்ததும் கண்டறிப்பட்டுள்ளது.
மேலும் இவர்களின் செல்ஃபோனை சோதனை செய்ததில் தனியாக வாட்ஸ் ஆப் குழு அமைத்து இது தொடர்பாக பேசியதும் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க திட்டம் தீட்டியிருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து காவல் துறையினர் இவர்கள் மூவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடந்தி வந்த நிலையில். இன்று ராமநாதபுரம் நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டு காவல் துறையினர் பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படியுங்க: வில்சனை சுட்டுக் கொல்ல பயன்படுத்திய துப்பாக்கி பறிமுதல்!