புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்தவர் அன்வர் ராஜா (33). இவர் பைக் வாங்கி விற்கும் தொழில் செய்துவந்தார். ராமநாதபுரம் மாவட்டம், பேய்க்கரும்புச் பகுதியைச் சேர்ந்தவர் அருண்பாண்டி (27). இவர் கோட்டைப்பட்டினத்தில் தங்கி மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்துள்ளார். கோட்டைப்பட்டினம் மீனவக் காலனியைச் சேர்ந்தவர் அசன்மைதீன் (35). இவரும் கடலுக்குச் சென்று மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்தார்.
இவர்கள் மூன்று பேரும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். இவர்கள் அடிக்கடி இரவு நேரத்தில் ஒன்றாக சந்தித்து மது அருந்துவது வழக்கம். தற்போது கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
இதனால், மதுபானம் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்துள்ளனர். போதை இல்லாமல் விரக்தியடைந்த இவர்கள் சேவிங் செய்த பின் முகத்தில் தடவும் லோஷனை வாங்கிச் சென்று கோட்டைப்பட்டினம் தர்கா அருகே அமர்ந்து சோடாவுடன் கலந்து அருந்தி உள்ளனர்.
லோஷனை அருந்திய மூன்று பேருக்கும், திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக மூவரையும் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதில் சிகிச்சை பலனின்றி அருண்பாண்டி, அசன்மைதீன் ஆகியோர் உயிரிழந்தனர். அன்வர்ராஜா உயிருக்கு ஆபத்தான நிலையில், அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோட்டை பட்டினம் காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மது கிடைக்காததால் லோஷனை சாப்பிட்டு இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: விடுமுறையிலும் தொடரும் பள்ளி வகுப்புகள்...வரப்பிரசாதம்!