நம் வீட்டு முன்னோர்கள், தாய், தந்தையரை கடவுளாக பாவித்து அவர்களுக்கு சிலை வைத்து வழிபடுவதை பார்த்திருப்போம். அவர்களுக்காக கோயில் கட்டியும் கேள்விப்பட்டிருப்போம்.
ஆனால் இவற்றிலிருந்து மாறுபட்டு தனது காதல் மனைவியின் சிலையை வடிவமைத்து வணங்கும் நிகழ்வு, தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நிகழ்ந்திருக்கிறது.
ஷாஜகான் தனது காதல் மனைவியின் நினைவாக தாஜ்மஹாலைக் கட்டியுள்ளார்.
தற்போது இதற்கு ஒரு படி மேலாக தனது காதல் மனைவியின் நினைவாக தனது வீட்டு வாசலில் சிலை வைத்து, அதற்கு வழிபாடு நடத்து அந்தச் சிலையைக் காதலித்து வாழ்ந்து வருகிறார் புதுக்கோட்டை மாவட்டம் உசிலங்குளத்தைச் சேர்ந்த சுப்பையா என்ற முதியவர்.
தனது காதல் மனைவியின் சிலையுடன் வாழ்ந்து வரும் சுப்பையாவின் காதல் கதை ஆச்சர்யமும், சோகமும் நிறைந்ததாக உள்ளது. இது பற்றி அவரே கூறியதாவது,
எனக்கு இப்போ 84 வயதாகிறது. 24 வயதில் எனது மனைவி சென்பகவள்ளியை காதலித்து திருமணம் செய்தேன். எனக்கு 10 குழந்தைகள். அதில் இருவர் இறந்துவிட்டனர்.
தற்போது 4 ஆண் பிள்ளைகள், 4 பெண் பிள்ளைகள் இருக்கின்றனர். அனைவருக்கும் திருமணமாகி, அவரவர் பிள்ளைகளுடன் வெளியூரில் வசித்து வருகின்றனர்.
மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றேன்.
என் மனைவி சென்பகவள்ளி கிட்னி கோளாறு காரணமாக 2006-ல் உயிரிழந்தார். எனது மகன்கள் என் மனைவியின் உடல் நிலையை கவனிக்கவில்லை. அதனால் என்னால் முடிந்த வரை முயற்சி செய்தும் காப்பாற்ற முடியாமல் இறந்து விட்டாள்.
அவளது பிரிவை தாங்கிக்கொள்ள முடியாத துயரத்திலிருந்தேன். அதிலிருந்து மீள்வதற்கு புத்தகங்களை படித்து வந்தேன். அப்படி ராமயணம் புத்தகத்தை படிக்கும்போது அதில் ராமன் சீதைக்காக தனது வீட்டில் சிலை வைத்திருந்தார் என்ற வரிகளைப் படித்தேன். அதன் பின் நானும் எனது மனைவிக்காக சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது என்றார் செண்பகவள்ளி காதல் கணவர் சுப்பையா.
தொடர்ந்து பேசிய அவர், உயிருக்கு உயிராக காதலித்த என் மனைவி இறப்பு என்னை மிகவும் பாதித்தால், 2009-ல் திருச்சி மங்கள & மங்கள் கடையின் மூலம் எனது மனைவி செண்பகவள்ளியின் சிலையை உருவாக்கி, என் வீட்டின் முன்புறம் வைத்து தினமும் பூஜை செய்து வழிபட்டு வருகிறேன்.
நான் என்ன சாப்பிட்டாலும் அவருக்கும் கொடுத்து விட்டு தான் சாப்பிடுவேன்.
என் மனைவி என்னை மிகவும் நேசித்தார். எனக்கு தாயாகவும், தாரமாகவும் இருந்தார். தற்போது வரை அவரை நானும் மிகவும் நேசிக்கிறேன்.
இந்த சிலை இருப்பதால் என் மனைவி என்னுடன் இருப்பது போல உணர்கிறேன். இது மட்டும் தான் எனக்கு சந்தோஷம், நிம்மதி எல்லாமே என்று காதல் கலந்த கண்ணீருடன் தெரிவித்தார் சுப்பையா.
தற்போதுள்ள இளைய தலைமுறையினருக்கு, உண்மைக் காதலின் வாழும் வடிவமாய் இருக்கிறது செண்பகவள்ளி - சுப்பையாவின் காதல் கதை.