புதுக்கோட்டை: முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நினைவிடம் அருகே கடலுக்குள் ரூ.81 கோடியில் 134 அடி உயரத்தில் பேனா சிலை அமைக்கத் தமிழ்நாடு அரசு திட்டமிட்டு கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்திய போது சீமான் உள்பட பலரும் கடல் வளம், சுற்றுச்சூழல் பாதிக்கும் என்றும், அதனால் கடலுக்குள் பேனா சிலை வைக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதன் பிறகு தொடர்ந்து பொதுமக்களிடம் பேனா நினைவுச் சின்னம் பெரும் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் தான் புதுக்கோட்டை நகரில் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி எதிரில் உள்ள 5 ஏக்கர் காலி இடத்தில் பூங்கா அமைக்கக் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அறிவிப்பு வெளியாகி பணிகள் தொடங்கியது.
சுமார் ரூ. 9 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் சிறுவர்கள் பெரியவர்களுக்கான பூங்கா, உடற்பயிற்சி கூடம், கணிதம், அறிவியல் உபகரணங்கள், காய்கறி, பழங்கள், இசை நீரூற்று, காங்கிரீட் மரங்கள், விலங்குகள், பறவைகள் என நூற்றுக்கணக்கான அம்சங்களுடன் பூங்கா தயாராகி வருகிறது.
விரைவில் பூங்கா திறப்புவிழா நடைபெற உள்ள நிலையில் சில நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பணிகளை ஆய்வு செய்தார். தற்போது அந்த அதி நவீன பூங்காவில் 15 அடி உயரத்தில் காங்கிரீட் பேனா சிலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பேனா சிலை கட்டுமானப் பணிகள் நடப்பது பற்றி அறிந்த ஏராளமானவர்கள் பார்த்துச் செல்கின்றனர்.
இதையும் படிங்க: பாலா, புகழால் சிக்கிய ரோபோ சங்கர்.. பிகில் - ஏஞ்சலை தூக்கிய வனத்துறை