புதுக்கோட்டை: 2018ஆம் ஆண்டு திருமயம் அருகே உள்ள மெய்யபுரத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்துவதற்கு உயர் நீதிமன்றம் தடைவிதித்திருந்தது. இதனைத்தொடர்ந்து காவல் துறையினர் ஊர்வலம் செல்லக்கூடாது என்று கூறினர்.
இதனையடுத்து பாஜக முன்னாள் தேசியச் செயலாளர் ஹெச். ராஜா, உயர் நீதிமன்றத்தையும் காவல் துறையையும் அவதூறாகப் பேசி ஊர்வலத்தை நடத்தியதாகக் கூறி திருமயம் காவல் துறையினர் அவர் உள்ளிட்ட 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இது தொடர்பாக குற்றப்பத்திரிகையும் தாக்கல்செய்யப்பட்டது. இன்று (ஜூலை 23) அந்த வழக்கில் ஹெச். ராஜா முன்னிலையாக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து திருமயம் உரிமையியல் மற்றும் நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில், நீதிபதி இந்திரா காந்தி முன்னிலையில் ஹெச். ராஜா, சூரிய நாராயணன் ஆகியோர் முன்னிலையாகினர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "நீதிமன்ற உத்தரவுப்படி திருமயம் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகியுள்ளேன். அனுபவம் வாய்ந்த உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் இவ்வழக்கில் எனக்காக முன்னிலையாகியுள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணையை செப்டம்பர் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் தேச விரோதமாகப் பேசுவது, பிரதமரை இழிவாகப் பேசுவது தொடர்ந்து நடந்துவருவது கடும் கண்டனத்துக்குரியது.
ஜார்ஜ் பொன்னையாவை ஏன் கைதுசெய்யவில்லை?
யாரேனும் இந்து சமூக வலைதளத்தில் கருத்துப் பகிர்ந்தால் உடனடியாக குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய காவல் துறை நடவடிக்கை மேற்கொள்கிறது. ஆனால் பிரதமர், உள் துறை அமைச்சர், இந்து சமுதாயத்தினரை இழிவாகப் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை ஏன் இன்னும் காவல்துறை கைதுசெய்யவில்லை?
அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைதுசெய்யவில்லை என்றால் இந்து சமுதாயம் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடும்.
ஸ்டேன் சுவாமிக்கு முதலமைச்சர் அஞ்சலி செலுத்தியது தவறு
நீதிமன்றமே நக்சலைட் என்று கூறிய ஸ்டேன் சாமிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் அஞ்சலி செலுத்தியது தவறான கண்டிக்கத்தக்க செயல். அதற்கு அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.
விவசாயிகளை திருடர்கள் என்று இழிவுபடுத்தி பேசிய தமிழ்நாடு நிதியமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர இவர் ஒருவரே போதும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் இவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் தலைமையில் பட்டியலினத்தவர் உரிமைகளுக்கான கண்காணிப்புக்குழு