புதுக்கோட்டையில் குழந்தைகள் வார விழா இன்று (நவ. 13) மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட சைல்டு லைன் சார்பில் நடைபெற்ற, இந்த விழாவில் ஆட்சியர் உமா மகேஸ்வரி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது மாணவிகள் மாவட்ட ஆட்சியரின் கையில் ராக்கி கட்டினர்.
பின்னர் விழாவில் மாவட்ட ஆட்சியர் உமா மகேஷ்வரி பேசியதாவது, "இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. பொதுமக்களிடையே குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த குழந்தைகள் வார விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் புதுக்கோட்டையில் சைல்டு லைன் மூலம் இன்று (நவ. 13) முதல் வியாழக்கிழமை (நவ. 19) வரை குழந்தைகள் வார விழா கொண்டாடப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக முதல் நாளான இன்று பள்ளி மாணவ, மாணவிகள் சார்பில் ராக்கி கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. குழந்தைகள் வார விழாவை முன்னிட்டு மாவட்டத்தில் விழிப்புணர்வு பேரணி, கேபிள் தொலைக்காட்சியில் குறும்படம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்து பயிற்சி அளித்தல், அங்கன்வாடி பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தல், பேச்சு பேட்டி, ஓவியப் போட்டி போன்ற விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
புதுக்கோட்டையில் 18 வயதிற்குள்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், அவர்களுக்கு ஏதேனும் பிரச்னை இருந்தால் சைல்டு லைனின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1098-க்கு தகவல் தெரிவிக்கலாம்" என்றார்.
இதையும் படிங்க: பால்ய மணம், குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான நெருப்பு சம்பா!