புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் கடந்த மாதம் 16 ஆம் தேதி ரம்யா, ராமு தம்பதிக்கு 2.7 கிலோ எடையுடன் கூடிய அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த இரண்டு நாள்களுக்கு பிறகு ரத்த வாந்தி, ரத்தம் கலந்த மலம், சுவாச கோளாறு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டது.
குழந்தையின் நுரையீரலிலிருந்தும் ரத்தகசிவு ஏற்பட்டதால் குழந்தைக்கு வென்டிலேட்டர் கருவி மூலம் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டது. ரத்தகசிவினை சரி செய்ய ஐந்து முறை ரத்த சிவப்பணுக்கள், ரத்த தட்டணுக்கள், பிளாஸ்மா செலுத்தப்பட்டது. குழந்தையை பரிசோதித்து பார்த்ததில் குழந்தையின் சிறுநீரகம் செயலிழந்து உப்பு சத்து மிக அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டது.
கல்லூரியின் முதல்வர் மருத்துவர் பூவதி அறிவுறுத்தலின் பேரில், குழந்தையின் உயிரை காப்பாற்ற பச்சிளங்குழந்தைகள் சிறப்பு மருத்துவர் பீட்டர் , சிறுநீரக சிறப்பு மருத்துவர் சரவணகுமார் ஆகியோர் கொண்ட மருத்துவக்குழுவினரால் குழந்தையின் வயிற்றில் குழாய் செலுத்தப்பட்டு டயாலசிஸ் சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது.
இரண்டு நாள்கள் டயாலசிஸ் சிகிச்சைக்கு பிறகு குழந்தையின் உப்புசத்து, சுவாசம் இயல்பு நிலைக்கு வந்தது. செயற்கை சுவாசம் படிப்படியாக நீக்கப்பட்டு குழந்தைக்கு தாய்ப்பாலும் கொடுக்கப்பட்டது. கிருமித்தொற்றுக்கான ஆன்டிபயாடிக் சிகிச்சை வழங்கப்பட்டது.
25 நாள்கள் சிகிச்சையில் குழந்தை உடல் நலம் தேறிய பின்பு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மிகவும் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட பச்சிளங்குழந்தையை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய மருத்துவர் பாலமுருகன் தலைமையிலான குழந்தைகள் மருத்துவர்களையும், செவிலியர்களையும் மருத்துவ கல்லூரி முதல்வர் மருத்துவர் பூவதி பாராட்டியுள்ளார்.
இதையும் படிங்க: ஏழைகளுக்கு குறைந்த விலையில் டயாலிசிஸ்!