புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள விராச்சிலை பகுதியைச் சேர்ந்தவர் கேசவன். இவர் அதிமுகவில் உள்ள நிலையில், இவரது உறவினரான அதே ஊரைச் சேர்ந்த கைலாசம் திமுகவில் உள்ளார்.
கைலாசம், கேசவன் ஆகிய இருவருக்குமிடையே நீண்ட நாள்களாகச் சொத்துப் பிரச்சினை இருந்துவருவதாகக் கூறப்படுகின்றது. இதனால் கேசவன் தரப்பினருக்கும் கைலாசத்திற்கும் இடையே பேச்சுவார்த்தை இல்லை என்று கூறப்படுகின்றது.
இந்நிலையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கேசவன் தரப்பினர் அதிமுகவிற்கும் கைலாசம் தரப்பினர் திமுகவிற்கும் பணிசெய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இந்தத் தேர்தல் பணியில் இருதரப்பிற்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து விராச்சிலையில் வைத்து நேற்றிரவு கைலாசம் தரப்பினர் கேசவன் தரப்பினர் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இதில் கேசவன் தரப்பைச் சேர்ந்த ஒரு சிலர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால் அங்கு வஜ்ரா வாகனம், 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டனர்.
மேலும் அந்தப் பகுதியில் கலவரம் ஏற்படாமல் இருக்க 20-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவப் படையினர், காவல் துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் மோதல் சம்பவம் தொடர்பாக கைலாசம் தரப்பைச் சேர்ந்த 22 நபர்கள் மீது பனையப்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து 16 பேரை கைதுசெய்துள்ளனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.