பெரம்பலூர் மாவட்டத்தில் ஏரிகள் புனரமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வேப்பந்தட்டை வட்டத்தில் உள்ள பேரையூர் ஏரியில் 78.50 மீட்டர் நீளத்திற்கு தடுப்பு சுவர் அமைக்கும் பணி 29 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், வேப்பந்தட்டை வட்டம் திருவாலந்துறை ஏரி 3.65 கிலோமீட்டர் தொலைவிற்கு வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணி 22 மீட்டர் நீளத்திற்கு தடுப்புச்சுவர் கட்டும் பணி உள்ளிட்டவை 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் விவசாயிகளின் பங்களிப்போடு புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
பேரையூர் ஏரி புனரமைக்கப்படுவதால் 11.30 மில்லியன் கன அடி நீர் சேமிக்கப்படுவதோடு 148.44 ஹெக்டேர் விளைநிலங்களும் திருவாலந்துறை ஏரி புனரமைக்கப்படுவதால் 6.36 மில்லியன் கன அடி நீர் சேமிக்கப்படுவதோடு 54.16 ஹெக்டேர் விளை நிலங்கள் பயன்பெறும்.
மேலும், மழை காலத்திற்கு முன்பாகவே பணிகளை முடித்து மழைநீரை சேமிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஆட்சியர் ஆலோசனை வழங்கினார். ஆய்வின்போது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பிரபாகரன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.