நாமக்கல் போதுப்பட்டி பகுதியில் பெதர்ஸ், மாஸ்டர்ஸ் என்ற 2 தனியார் நீட் பயிற்சி மையங்கள் அரசின் கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறிச் செயல்படுவதாக மாவட்ட ஆட்சியருக்குப் புகார் வந்தது.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் கோட்டைகுமார், வருவாய்த் துறை அலவலர்கள் 2 தனியார் நீட் பயிற்சி மையங்களுக்கு இன்று (நவ. 23) நேரிடையாகச் சென்று விசாரணைமேற்கொண்டனர்.
அப்போது 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் முகக்கவசம் அணியாமலும், தனிமனித இடைவெளி உள்ளிட்ட எவ்வித கரோனா விதிமுறைகளையும் பின்பற்றாமல் நீட் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது தெரியவந்தது. இதனையடுத்து 2 பயிற்சி மையங்களுக்கும் சீல்வைத்து நடவடிக்கை மேற்கொண்டார்.
இது குறித்து வருவாய் கோட்டாட்சியர் கோட்டை குமாரிடம் கேட்டபோது, "இரண்டு பயிற்சி நிறுவனங்களுக்கும் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், தொடர்ந்து பயிற்சி வகுப்புகள் நடத்தியதால் சீல்வைக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவு வரும்வரை ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்திக்கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளேன்" எனத் தெரிவித்தார்.