நாமக்கல் மாவட்டம், குமாரபாளைம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (24). ஊத்துக்குளிகாடு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (40). மங்களபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராம் (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்கள் மூவரும் தடை செய்யப்பட்ட நாட்டுத் துப்பாக்கியுடன் நேற்று (மே 27) இரவு ராசிபுரம் அருகேயுள்ள சிங்கிலியன்கோம்பை மலைப்பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் முயல் வேட்டைக்காக சென்றுள்ளனர்.
அப்போது, நாட்டுத் துப்பாக்கி தவறுதலாக வெடித்தது. இதில், சக்திவேல் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த செந்தில்குமார், ராம் இருவரும் சக்திவேலின் உடலை இருசக்கர வாகனத்தில் ஏற்றி அவரது வீட்டின் அருகே போட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த மங்களபுரம் காவல்துறையினர், சக்திவேலின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பிவைத்தனர். இதைத் தொடர்ந்து, நாட்டுத் துப்பாக்கியை காவல் துறையினர் பறிமுதல் செய்து தப்பியோடிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:என்கவுன்ட்டர் வீடியோ வெளியிட்ட சட்டீஸ்கர் நக்சலைட்டுகள்