மாநில லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் குமாரசாமி இன்று நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "கரோனா காலத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாகக் குறைந்த நிலையில், அதன் பயனைப் பயன்பாட்டாளர்களுக்கு வழங்காமல் மத்திய அரசு கலால் வரியையும், மாநில அரசு வாட் வரியையும் உயர்த்தியுள்ளது.
இதனைக் குறைக்க வேண்டும். டெல்லி அரசு வாட் வரியைக் குறைத்தது போல் தமிழ்நாடு அரசும் டீசல் மீதான வாட் வரியைக் குறைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் 50 விழுக்காடு லாரிகள் மட்டுமே இயங்கும் நிலையில், லாரிகளுக்கான காலாண்டு வரியை ரத்து செய்திட வேண்டும்.
வாகனங்களைப் புதுப்பிக்கும்போது ரிப்ளக்டர் ஸ்டிக்கரை (ஒளிரும் முப்பரிமாண பட்டை) ஒரே நிறுவனத்தில் மட்டுமே வாங்கிட வேண்டும் என்ற உத்தரவைத் திரும்பப்பெற வேண்டும். ஏற்கனவே வேகக் கட்டுபாட்டுக் கருவிகளை வைத்துள்ள வாகனங்களுக்கும் புதியதாக வேகக் கட்டுபாட்டுக் கருவி பொருத்த வேண்டும் என்ற உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும். வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் தவணை செலுத்துவதை மேலும் 6 மாதத்திற்கு நீடித்து கூடுதல் வட்டியில்லாமல் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாகன அனுமதி புதுப்பித்தல், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தலை செப்டம்பர் 30ஆம் தேதிக்குப் பிறகும், மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும். தற்போது விபத்துகள் அதிகளவு குறைந்துள்ள நிலையில் காப்பீடு நிறுவனங்கள் அதிக லாபத்தில் இயங்குவதால், காப்பீடு காலாவதியாகும் பாலிசிகளுக்கு அதே நிலையில் மேலும் 6 மாதத்திற்கு நீட்டித்துத் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் 2 வாரத்தில் நிறைவேற்றவில்லை என்றால் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெற உள்ள சம்மேளனத்தின் மாநில செயற்குழு க்கூட்டத்தில் வேலை நிறுத்தம் குறித்து முடிவெடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நாமக்கலில் நடப்பட்ட 27 நட்சத்திர வழிபாடு மரங்கள்