நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள கபிலர்மலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தெற்கு தொட்டிபாளையத்திற்குச் செல்லும் பிரதான சாலையில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. அக்கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
கபிலர்மலை, பெரிய சோளிபாளையம் வழியாகச் செல்லும் இந்த பிரதான சாலையைக் கிராம மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என ஏராளமான கிராம மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில தினங்களாக அப்பகுதியில் நாள்தோறும் பெய்த கனமழையால் சாலையில் இரண்டு அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளது. இதுநாள் வரை மழைநீர் தேங்காமல் இருந்தது. ஆனால், தனியார் பட்டா நிலத்தின் உரிமையாளர் அவரது நிலத்திற்குச் சுற்றுச்சுவர் அமைத்ததால் மழைநீர் வெளியே செல்ல வழியின்றி, சாலையில் வெள்ளம்போல் தேங்கியுள்ளது.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அலுவலர்களுக்குப் பலமுறை தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், இன்று மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர். அந்த மனுவில் உடனடியாக சாலையில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஜப்பானில் கடும் வெள்ளம்: பலி எண்ணிக்கை உயர வாய்ப்பு