நாமக்கல்: பரமத்திவேலூர் அடுத்த பாண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (45). இவர் அதே பகுதியைச் சேர்ந்த உறவினரின் 15 வயது சிறுமியை அடிக்கடி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
இதையடுத்து கடந்த மாதம் 9ஆம் தேதியன்று அந்த சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது மணிகண்டன் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். சிறுமியின் அலறலை அடுத்து அங்கு வந்த உறவினர்கள் மற்றும் பெற்றோர் மணிகண்டனை சரமாரியாக தாக்கி காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு
தொடர்ந்து அச்சிறுமியின் பெற்றோர் கடந்த மாதம் 17ஆம் தேதியன்று பரமத்திவேலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர். புகாரையடுத்து மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அப்போது மணிகண்டன் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.
இதன் பின் நேற்று (செப்.11) பாண்டமங்கலத்திற்கு வந்த மணிகண்டனை காவல் துறையினர் மடக்கி பிடித்து விசாரணைக்காக பரமத்திவேலூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். அப்போது காவல் நிலையத்திற்குள் நுழையும்போதே தான் கழிப்பறை செல்ல வேண்டும் என கூறியுள்ளார். நீண்ட நேரமாகியும் மணிகண்டன் வெளியே வராததால் காவல் துறையினர் உள்ளே சென்று பார்த்த போது அவர் மயங்கி கிடந்தது தெரியவந்தது.
மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழப்பு
மணிகண்டனை பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி அளித்துள்ளனர். அப்போது, தான் சாப்பிட்டு மூன்று நாட்கள் ஆனதாகவும், தனக்கு சர்க்கரை நோய் உள்ளதாகவும் மணிகண்டன் மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார்.
மணிகண்டனின் உடல்நிலை மோசமானதை அடுத்து மேல் சிகிச்சைக்காக நாமக்கல் தலைமை அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்துள்ளனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மணிகண்டன் உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து உடற்கூறாய்விற்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட நபர் உயிரிழந்தையடுத்து உயிரிழப்புக்கான காரணம் அறிவதற்காக நாமக்கல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி முன்னிலையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: நீட் அச்சத்தால் மாணவர் தற்கொலை- முதலமைச்சர் வேதனை