நாமக்கல் நகராட்சி பகுதியில் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக அனைத்து துறை அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் நகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியர் மெகராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும் கரோனா தொற்று கண்டறியப்பட்ட பகுதிகளில் மட்டும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும் என நகராட்சி அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார். கூட்டத்தில் நகராட்சி, வருவாய், காவல் துறை, சுகாதாரத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் மெகராஜ், "கடந்த 3 வாரங்களாக நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் நகர் பகுதியில் அதிகமாக உள்ளது. தொற்று அதிகம் உள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளது.
அப்பகுதிகளில் 10 முதல் 12 நாட்களுக்கு மினி லாக்டவுன் அமல்படுத்தப்படும். இவை பொதுமக்களுக்கு எவ்வித சிரமமும் இல்லாமல் அமல்படுத்தப்படும். இதன்மூலம் தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்படும். மேலும் அவசியமின்றி முக கவசம் இல்லாமல் வெளியே சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்