நாமக்கல்லில் குழந்தைகள் கடத்தி விற்பனை செய்யப்பட்ட வழக்கில் ஒய்வுபெற்ற செவிலி அமுதவல்லி, அவரது கணவர் முருகேசன், அருள்ராஜ் ஆகிய மூவரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு சிபிசிஐடி காவல் துறையினர் நாமக்கல் மாவட்ட குற்றவியல் முதன்மை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் நீதிபதி கருணாநிதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மூன்று பேரையும் இரண்டு நாள் காவல் துறையினரின் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார். மேலும் அவர்களை மே 9ஆம் தேதி ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
இதனையடுத்து, மூவரையும் சேலம் அழைத்துவந்து விசாரணையைத் தொடங்கினர். இந்நிலையில், அவர்களிடம் சிபிசிஐடி காவல் துறையினர் இன்றும் விசாரித்துவருகின்றனர். அப்போது மூவரிடமும் துருவித் துருவி கேள்வி கேட்டு விசாரணை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.