நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். நாமக்கல் நகரில் ஸ்டுடியோ கடை நடத்தி வருபவர் இலக்கியசெல்வன். இவர் வங்கி கடன் பெற தொழில் வரி ரசீது வாங்க நாமக்கல் நகராட்சி அலுவலகத்தை நாடியுள்ளார். அப்போது நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் வருவாய் உதவி அலுவலர் வரதராசு (52) என்பவர் தொழில் வரி ரசீது வழங்க ரூ3000 லஞ்சமாக கேட்டுள்ளார். அதனை தர செல்வன் மறுத்துள்ளார்.
பின்னர் உதவி அலுவலர் கனிந்து பேசி ரூபாய் 2,000 கேட்டுள்ளார், அதைத் தர விருப்பம் இல்லாத இலக்கியசெல்வன், நாமக்கல் லஞ்ச ஒழிப்பு காவலர்களுக்கு தகவல் கொடுத்ததின் பேரில், லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ஜெயக்குமார் தலைமையில் காவல்துறையினர் கொடுத்த அறிவுரைப்படி நேற்று நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் இலக்கியசெல்வன் ரூபாய் இரண்டு ஆயிரம் பணத்தை வருவாய் அலுவலர் வரதராசு பெறும்போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு காவலர்கள், உதவி அலுவலரை கையும் களவுமாக கைது செய்தனர். பின்னர் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.