நாமக்கல்: தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவர் சிங்கராஜ் இன்று (டிச.15) நாமக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நாமக்கல் மண்டலத்தில் இருந்து முட்டை ஏற்றுமதி கடந்த இரண்டு மாதங்களில் வேகமாக அதிகரித்து வருகிறது.
உக்ரைன் போர் காரணமாக அங்கிருந்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மக்காச்சோளம் மற்றும் சோயா போன்ற தீவன மூலப்பொருள்கள் தடைபட்டுப்போனதால், பல நாடுகளில் கோழி பண்ணைகளுக்குத் தேவையான மக்காச்சோளம், சோயா தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் தீவனம் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் முட்டை உற்பத்தி உலக நாடுகளில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், இந்தியாவில் குறிப்பாக நாமக்கல் மண்டலத்தில் இருந்து முட்டைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிக்கான ஆர்டர் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. தற்போது வளைகுடா நாடுகளான துபாய், கத்தார், பக்ரைன், ஐக்கிய அரபு எமிரேட், மாலத்தீவு மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளுக்கு மாதம்தோறும் 8 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், புதிதாக மலேசியாவிற்கும் முதன்முதலாக ஏற்றுமதிக்கான ஆர்டர் கிடைத்துள்ளது. இதன்படி வாரம்தோறும் ஒரு கோடி முட்டைகள் அதாவது மாதம் 4 கோடி முட்டைகள் அனுப்புவதற்கான ஆர்டர் கிடைத்திருக்கிறது. முதன்முயற்சியாக நாமக்கல்லில் இருந்து 54ஆயிரம் முட்டைகள் விமானம் மூலம் மலேசியா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதன் பரிசோதனைக்குப் பின் தொடர்ந்து ஏற்றுமதிக்கான ஆர்டர்கள் கிடைக்கும். உலக நாடுகளை விட இந்தியாவில் இருந்து கிடைக்கும் முட்டைகள் விலைகுறைவாக உள்ளதோடு, உலக சுகாதார தரத்திற்கு கிடைப்பதால் பல்வேறு உலக நாடுகள் இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய முயற்சி எடுத்து வருகிறது. எனவே, வரும் நாள்களில் மாதம்தோறும் 15 கோடி முட்டைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வாய்ப்பு இருக்கிறது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “கேரளாவில் கோட்டயம் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும், தமிழ்நாட்டில் அது பரவ வாய்ப்பே இல்லை. இங்கு அனைத்து கோழிப் பண்ணைகளிலும் தொடர்ந்து உயிரி தொழில்நுட்பம் கடைபிடிக்கப்படுவதோடு, கேரளா சென்று வரும் வாகனங்கள் முட்டை அட்டைகள் தொடர்ந்து கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது. அதனால் இப்பகுதியில் பறவைக் காய்ச்சல் தாக்க வாய்ப்பே இல்லை” என்றார்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் தூள் பறக்கும் கிறிஸ்துமஸ் வியாபாரம் - மக்கள் ஆர்வம்