நாமக்கல் மாவட்டம் நாமகிரிபேட்டை அடுத்த வெள்ளக்கல்பட்டியைச் சேர்ந்தவர் அலுமேலு (50). இவர் காவேட்டிபட்டி மேற்கு வீதியில் வசித்துவரும் அவரது தங்கை சந்தோசம் வீட்டில் கடந்த சில நாள்களாகத் தங்கியுள்ளார். இந்நிலையில், அலமேலு இன்று (நவ. 02) மாலை துணிகளை துவைத்து அவரது வீட்டின் முன் கட்டப்பட்டிருந்த கம்பியில் போட்டுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக கம்பியை பிடித்தபோது அலமேலு மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. அவர் சத்தமிட அருகில் இருந்தவர்கள் மின் இணைப்பை துண்டித்து அவரை காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால் அவர் மீது தொடர்ந்து மின்சாரம் பாய்ந்ததால் அவர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நாமக்கல் காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: திருச்சியில் 32 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருள்கள் பறிமுதல்!