நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் மாவட்ட மகளிர் மாநாடு நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சின்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஈஸ்வரன் கூறியதாவது, "பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதை ஊக்கப்படுத்தவே இந்த மாநாடு நடைபெற்றது. மரவள்ளி கிழங்கு விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால், விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மரவள்ளி கிழங்கு விவசாயத்தைக் காப்பாற்ற நியாய விலைக் கடைகளில் இலவசமாக ஜவ்வரிசி வழங்க வேண்டும். நாமக்கல்லில் அரசு சார்பில் ஜவ்வரிசி ஆலை அமைக்கப்பட வேண்டும். திருத்தணியில் திமுக தலைவர் முக ஸ்டாலின் 'வேல்'லை கையில் ஏந்தியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், "அரசியலில் இருப்பவர்கள் தேர்தலுக்காக 'வேல்'லை கையில் எடுப்பதில் தவறில்லை.
மக்களின் எண்ணங்களை புரிந்து கொண்டு, அதற்கான மாற்றங்களை மு.க.ஸ்டாலின் கொண்டு வர வேண்டும். கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்கு காலம் உள்ளது. திமுக கூட்டணியில் இணக்கமாக உள்ளோம். கொங்கு மண்டலத்தில் உள்ள காவிரி, பொன்னியாறு, திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றக் கோரி விரைவில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் பாத யாத்திரை நடத்த உள்ளோம் என்றார்.
இதையும் படிங்க: சிறையிலிருந்து வெளிவரும் சசிகலாவைச் சந்திப்பேன்' கருணாஸ்!