நாமக்கல் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 110 ஆக இருந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது.
நேற்றைய கணக்கின்படி மாவட்டத்தில் ஆயிரத்து 20 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக குமாரபாளையம், பள்ளிபாளையம், பரமத்திவேலூர், இராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நோய்த்தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இப்பகுதிகளில் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு அப்பகுதியில் வசிப்பவர்கள் வெளியே செல்லாதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டு, அப்பகுதிகளில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டுள்ளது.
மேலும், அப்பகுதிகளில் வசிப்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர், ஜிங்க் மாத்திரைகளும் வழங்கப்பட்டன. இதேபோல் கடந்த ஜீலை 22 ஆம் தேதி வரை மாவட்டத்தில் கரோனாவால் ஒருவர் மட்டுமே உயிரிழந்த நிலையில் கடந்த 18 நாள்களில் 22 பேர் உயிரிழந்து மாவட்டத்தில் மொத்த உயிரிழப்பு 23 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது தொழிலாளர்கள் நிறைந்த பகுதிகளில் தொற்று வேகமாக பரவிவரும் நிலையில் தொற்று பரவலை கட்டுபடுத்த சுகாதாரம் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் பொதுமக்களும் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என சுகாதாரத் துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.