மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறைசென்று வெளியில் வந்த முன்னாள் வன்னியர் சங்க நகரச்செயலாளர் முன்விரோதம் காரணமாக நேற்று(ஆகஸ்ட் 17) நள்ளிரவில் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதில், தொடர்புடையதாக 20 பேர் கொண்ட கும்பல் தேடப்பட்டுவரும் நிலையில், அவர்களில் 9 பேரை மயிலாடுதுறை போலீஸார் கைது செய்துள்ளனர். மீதமுள்ள குற்றவாளிகளைப் பிடிக்குமாறு வன்னியர் சங்கத்தினர் மற்றும் இறந்தவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை கொத்தத்தெருவை சேர்ந்த ரவி என்பவரின் மகன் கண்ணன், இவருக்கு 31 வயதாகிறது. ஆம்புலன்ஸ் வைத்து தொழில் செய்து வருகிறார். இவர் மயிலாடுதுறை முன்னாள் வன்னியர் சங்க நகரச்செயலாளராக பொறுப்பு வகித்தவர்.
இவருக்கும், மயிலாடுதுறை கலைஞர் காலனியைச்சேர்ந்த மின்வாரிய ஊழியர் கதிரவன் என்பவருக்கும் இடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஹோட்டலில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக கண்ணன், கதிரவனை தாக்கியுள்ளார். இதுகுறித்து, கதிரவன் அளித்தப்புகாரின்பேரில் மயிலாடுதுறை போலீஸார் வழக்குப்பதிவு செய்து, கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கொடூர கொலை: கண்ணன் மீது ஏற்கெனவே பல்வேறு அடிதடி வழக்குகள் உள்ளதால், அவர் குண்டர் தடுப்புச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்துவிட்டு கடந்த 15 நாள்களுக்கு முன்பு விடுதலை ஆகி ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு கண்ணன் தனது நண்பர்களான நல்லத்துக்குடியைச் சேர்ந்த ரஞ்சித்(19), டபீர் தெருவைச் சேர்ந்த திவாகர்(22) ஆகியோருடன் இரண்டு இருசக்கர வாகனத்தில் கடைவீதியில் பீடா வாங்கிக் கொண்டு திரும்பி வந்துள்ளார்.
அப்போது, புதிய பேருந்து நிலையம் அருகே கண்ணன் உள்ளிட்ட மூவரையும் வழிமறித்த கலைஞர் காலனியைச் சேர்ந்த கதிரவன், அஜித், திவாகர் அடங்கிய கும்பல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியுள்ளனர். இதையடுத்து, கண்ணனுடன் வந்த நண்பர்கள் இருவரும் தப்பி ஓடியுள்ளனர். இதையடுத்து அருகில் இருந்த கலைஞர் காலனியில் இருந்து அந்த கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து, தப்பிக்க முயற்சி செய்த கண்ணனை விரட்டிச் சென்று கழுத்து, தலை, மார்பு பகுதியில் சரமாரியாக வெட்டி கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பினர்.
போலீசார் குவிப்பு: இச்சம்பவம் அறிந்து நிகழ்விடத்துக்கு வந்த மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையிலான போலீஸார், கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளைக்கைப்பற்றி அதனடிப்படையில் கொலை வழக்குப்பதிந்து கதிரவன் உள்ளிட்ட 20 பேரைத் தேடிவந்தனர்.
இந்நிலையில், சம்பவத்தில் ஈடுபட்ட கதிரவன், சேது, சந்தோஷ், ரஞ்சித், முருகவேல், கார்த்திக், துரை, குணசேகரன், பிரபாகரன் ஆகிய 9 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். எஞ்சிய நபர்களைப் பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவத்தையடுத்து பதற்றத்தை தணிக்க மயிலாடுதுறை நகர் முழுவதும் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் குவிந்தனர். தொடர்ந்து உறவினர்களுடன் மருத்துவமனை அருகே மயிலாடுதுறை-கும்பகோணம் சாலையில் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து குண்டர்சட்டத்தில் அடைக்க வலியுறுத்தி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையினை அடுத்து சாலைமறியலை கைவிட்டனர். குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்தால்தான் உடலை பெற்றுச்செல்வோம் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:அரும்பாக்கத்தில் திருடப்பட்ட நகைகள் காவல் ஆய்வாளர் வீட்டில் பறிமுதல்