ஊரக வளர்ச்சித் துறை கணினி உதவியாளர்கள் கடந்த 2007ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டு, தற்போது வரை, சுமார் 14 ஆண்டுகளாக தொகுப்பு ஊதிய அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். முன்னதாக கணினி உதவியாளர்களின் பணிகளை நிரந்தமாக்க கடந்த 2017ஆம் ஆண்டில் அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் அது தற்போது வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.
மேலும், ஊதிய உயர்வு குறித்து வெளியிடப்பட்ட அரசாணை எண் 71உம் கடந்த நான்கு ஆண்டுகளாக நிறைவேற்றப்படவில்லை. கணினி உதவியாளர்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் போராடியும் அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.
இந்நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசாணையை நிறைவேற்றக் கோரி, தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றி வரும் ஆயிரத்து 250 கணினி உதவியாளர்கள், இன்று முதல் காலவரையறையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் நாகை மாவட்டம், மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றும் ஏழு நபர்கள் உள்பட, மாவட்டத்தின் 11 ஒன்றியங்களில் பணியாற்றும் 46 பணியாளர்கள் இன்று வேலைக்கு வரவில்லை. இதனால் 100 நாள் வேலைத் திட்டத்தில் பயன்பெறும் 1.23 கோடி பேரின் சம்பளத் தொகையானது பட்டுவாடா செய்ய வழியின்றி, பணி முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க : பருத்தி விவசாயிகள் போராட்டம்