மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்கள் ஆகியன 431 கி.மீட்டர் தூரத்துக்கு முதலமைச்சரின் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின்கீழ் தற்போது தூர்வாரப்படுகிறது. இதற்காக 5.45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த மாதம் 28ஆம் தேதி கனரக வாகனங்களைக் கொண்டு தூர்வாரும் பணிகள் தொடங்கின.
இப்பணிகளை, மேட்டூரில் திறக்கப்படும் காவிரி நீர் வந்தடைவதற்கு முன்னதாக முடிக்க திட்டமிடப்பட்டு துரிதமாக நடைபெற்றுவருகிறது. இத்திட்டத்தின்கீழ் மயிலாடுதுறை அருகே மூவலூர் காவிரி ஆற்றின் நீர் ஒழுங்கியில் இருந்து பிரியும் சுமார் 4 கி.மீட்டர் தொலைவுள்ள முத்தப்பன் வாய்க்கால் 45 ஆண்டுகளுக்குப் பிறகு பொதுப்பணித் துறை மூலம் 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் தற்போது தூர்வாரப்படுகிறது.
இதன்மூலம் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுவதோடு, நிலத்தடி நீர்மட்டமும் உயரும் என்பதால் தமிழ்நாடு அரசுக்கும், பொதுப்பணித் துறைக்கும் அப்பகுதி விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: இன்றுமுதல் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறப்பு