மருத்துவப் படிப்பில் சேருவதைக் கனவாகக் கொண்டிருந்த அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலை நீட் தேர்வுக்கு எதிரான போராட்டமாக மாறியபோது, அனைவருக்கும் ஏற்றத்தாழ்வு இல்லாத பொதுவான கல்விமுறை வேண்டும் என்பதை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர் அரசுப் பள்ளி ஆசிரியை சபரிமாலா.
தற்போது, தமிழ்நாட்டில் புதிதாக பெண் விடுதலை என்ற அரசியல் கட்சியைத் தொடக்கியுள்ளார். பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, நீட் தேர்வை ரத்து செய்வது, ஒற்றை கல்வி முறை, கிராமங்கள் தோறும் கட்டாயக் கழிப்பறை உள்ளிட்ட 15 கொள்கைகளை முன்னிறுத்தி, பெண் விடுதலை என்ற புதிய அரசியல் கட்சியை ஆசிரியை சபரிமாலா இன்று (ஜூலை 15) தொடங்கினார்.
இந்த கட்சியின் அறிமுக விழா இன்று (ஜூலை 15) நாகப்பட்டினத்தில் நடைபெற்றது. அப்போது கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தி செய்தியாளர்களிடம் ஆசிரியை சபரிமாலா கூறியதாவது, “இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்ந்து நிகழ்வதால், என் ஆசிரியர் பணியை துறந்து பெண் விடுதலை கட்சியைத் தொடங்கி இருக்கிறேன்.
இது ஆளுமையான கட்சிகளுடன் போட்டி போடுவதற்காக தொடங்கப்பட்ட கட்சி அல்ல, பெண் பாதுகாப்புக்காகவே பெண் விடுதலை என்ற பெயரில் தொடங்கப்பட்டது. என் கட்சிக்கு மக்களிடையே அமோக ஆதரவு பெருகிவருகிறது. இந்தக் கட்சி பெண்களை மதிக்கும் ஆண்களுக்கும், பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காகவும், தலைமுறை மாற்றத்திற்காகவும் தொடங்கப்பட்டது” என்றார்.
இதையும் படிங்க: ’ரஜினிகாந்த் நவம்பர் மாதத்தில் கட்சி தொடங்குவார்’ - கராத்தே தியாகராஜன்