நாகை: திருமருகல் ஒன்றியம் கொட்டாரக்குடி ஊராட்சிக்குட்பட்ட பெருஞ்சாத்தான்குடி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராமத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக சாலை வசதி, குடிநீர், மயானம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், திருமருகல் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பலமுறை அக்கிராம மக்கள் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காத காரணத்தால், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெருஞ்சாத்தான்குடி பகுதியில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில், சாலை வசதி செய்து தரவும், மயானம், குடிநீர், பாலம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
தொடர்ந்து பொதுமக்களிடம் போலீசார் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், சாலை மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அடிப்படை வசதிகள் செய்துதர வலியுறுத்தி நடைபெற்ற கிராம மக்களின் சாலை மறியல் போராட்டத்தால் திருவாரூர் - நாகூர் நெடுஞ்சாலையில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: அரசியல் தலைவர்களிடம் பணம் மோசடி செய்தவரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு