மயிலாடுதுறை திருவாவடுதுறையில் ஆதீனத்திற்குச் சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்நிலையில், புரெவி புயலால் ஏற்பட்ட கனமழையின் காரணமாக தீர்த்தக் குளம் நிரம்பி தண்ணீர் கோயிலுக்குள் புகுந்துள்ளது.
இந்தக் குளம் நிரம்பினால் அந்தத் தண்ணீர் அருகிலுள்ள செட்டிகுளத்திற்குச் சென்று வடிவது வழக்கம். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக கோயில் குளத்திலிருந்து செட்டிகுளத்தில் தண்ணீர் செல்லும் பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால், தண்ணீர் செல்ல வழியின்றி தீர்த்தக்குளம் நிரம்பி தண்ணீர் கோயிலுக்குள் புகுந்துள்ளது. இதையடுத்து, கோயில் நிர்வாகத்தினர் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றிவருகின்றனர்.
ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால் புயல் காலங்களில் மழைநீர் குளத்திலிருந்து கோயிலுக்குள் புகுந்துவருவது வாடிக்கையாக உள்ளதால், உடனடியாக குளத்திலிருந்து தண்ணீர் செல்லும் பாதையிலுள்ள ஆக்கிரமிப்புகளை மாவட்ட நிர்வாகம் அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோயில் நிர்வாகத்தினர், பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: தொடர் மழையால் தண்ணீர் சூழ்ந்த கிராமம்!